அண்மையில் மகிந்தவினால் யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கப்பட்ட போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து இரண்டாவது தடவையாகத் தாக்கப்பட்டுள்ளது. யாழ்-கொழும்பு சேவையில் ஈடுபடும் போக்குவரத்து சபை பேருந்தின் மீது இன்று இரவு இனந்தெரியாதோரால் கல்வீசித் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று இரவு ஒன்பது மணியளவில் யாழ்.அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்து.
அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்ட மகிந்த போக்குவரத்துச் சபைக்கு பேருந்துகளையும் வழங்கி வைத்திருந்தார்.
அவற்றில் யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட புதிய பேருந்தின் மீது கடந்த சில தினங்களிற்கு முன்னரும் இனந்தெரியாதோரால் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட புதிய பேருந்து பயணிகளுடன் யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருக்கையில் மாம்பழம் சந்தியில் வைத்து இனந்தெரியாதோரால் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டள்ளது.
இதன் போது பேருந்தின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்த போதும் பயணிகள் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பேருந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.