
பல்வேறு உடல்நலக் குறைபாடுகள், வயது ஆகியவற்றைக் காரணம்காட்டி ஜெயலலிதாவுக்கு பிணை வழங்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வழக்கில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தினால் கடந்த 27ஆம் திகதி நான்காண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதற்கமைய பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதா உட்பட ஏனையோர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலைமையின் கீழ் பெங்களூர் நீதிமன்றத்திலும், கர்நாடகா நீதிமன்றத்திலும் ஜெயலலிதா சார்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தமிழக முன்னாள் முதலமைச்சருக்கு பிணை வழங்குமாறு கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அதன் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஜெயலலிதாவின் மேன்முறையீட்டு மனு சார்பாக ஏற்கனவே ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி விலக்கப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மூத்த வழக்கறிஞர் எஸ். நரிமன் ஆஜராகவுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்குகளில் கர்நாடகா மாநில அரசு சார்பாக ஏற்கனவே வழக்கறிஞர் எஸ். நரிமன் ஆஜராகியிருந்ததுடன், தமிழக அரசுக்கும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் எதிராக பல்வேறு கருத்துகளை நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலைமையின் கீழ், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தமிழக முன்னார் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு பிணை வழங்குவதை ஆட்சேபித்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்னை தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கை தொடர்நதவர் என்ற வகையில் அவருக்கு பிணை வழங்குவதற்கு முன்பு தன்னிடம் கருத்து கேட்கவேண்டும் என்று கோரி சுப்ரமணியன் சுவாமி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தஹிந்து மேலும் குறிப்பிட்டுள்ளது.