ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான டொக்டர் கிறிஸ் நோனிஸ், குறித்த விருந்துபசாரத்திற்கு அழைப்பின்றி சென்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ள கருத்தில் எவ்வித உண்மையும் இல்லையென பி.பி.சி சந்தேஷய நேற்று (13) செய்தி வெளியிட்டது. கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைக் கூறியிருந்தார். அமைச்சரின் இந்தக் கருத்தை செப்டம்பர் 23 ஆம் திகதி நியூயோக் நகரில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்கள் நிராகரித்துள்ளதாக பி.பி.சி சந்தேஷய நேற்று செய்தி வெளியிட்டது.
நியூயோக்கில் உள்ள இலங்கையின் பிரபல விமான சேவை நிறுவனமொன்றின் பிரதிநிதியின் இல்லத்தில் இந்த விருந்துபசாரம் இடம்பெற்றுள்ளதாக சந்தேஷய செய்தி வெளியிட்டது. விருந்துபசாரத்திற்கு முதல்நாள் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற மற்றுமொரு இராப்போசன விருந்துபசாரத்தில் அந்த விமான சேவை பிரதிநிதி டொக்டர் கிறிஸ் நோனிசுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்ததாக விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களை மேற்கோள்காட்டி பி.பி.சி சந்தேஷய செய்தி வெளியிட்டுள்ளது. மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகளின் இலங்கைத் தூதுவர் பாலித கொஹன, பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஸ, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன ஆகியோர் அந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த விருந்துபசாரத்திற்கு டொக்டர் கிறிஸ் நோனிஸ், மற்றும் பிரசாத் காரியவசம் ஆகியோர் ஒரே காரில் சென்றுள்ளதாக சந்தேஷய செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது சஜின் டி வாஸ் குணவர்தன தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பிரித்தானியாவிற்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். சஜின் வாஸ் குணவர்தன டொக்டர் கிறிஸ் நோனிஸ் மீது சரமாரியாக தாக்குல் மேற்கொண்ட போது பிரசாத் காரியவசம் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு சஜின் வாஸ் குணவர்தனவை அப்புறப்படுத்தியதாக பி.பி.சி சந்தேஷய தெரிவித்துள்ளது.
எனினும், இந்த சம்பவத்தின் பின்னர் தனது இராஜினாமாக் கடிதத்தை கிறிஸ் நோனிஸ் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார். அதன் பின்னர் லண்டனுக்குச் சென்று பேர்மிங்ஹேம் நகரில் நடைபெற்ற பிரித்தானிய கொன்ஸவேடிவ் கட்சியின் இவ்வருடத்திற்கான வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கிறிஸ் நோனிஸ் இலங்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். இதன்போது இராஜதந்திரிகள் நோனிஸ் எதிர்நோக்கிய சம்பவம் குறித்து வினவியுள்ளதாகவும் பி.பி.சி சந்தேஷய குறிப்பிட்டுள்ளது