யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் வைத்து யாழ்.இந்து கல்லூரி மாணவன் சண்முகநாதன் யதுசன் (வயது 20) கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்கரன் புதன்கிழமை (15) உத்தரவிட்டார்.
மேற்படி மாணவனின் வீட்டிற்குள் கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நுழைந்த ஆயுததாரிகள் மாணவனையும், தந்தை, தாயையும் கோடாரியால் கொத்தியதுடன், வீட்டிலிருந்த பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர். இதில் மாணவன் உயிரிழந்ததுடன், தந்தை, தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சுகமடைந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பிலான விசாரணைகளை முதலில் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வந்ததுடன், மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸ் பிரிவு விசேட பொலிஸ் குழு மேற்கொண்டது. இதன்போது, மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் இனங்காணப்பட்டு, பொலிஸார் அவர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில் அவர்கள் தப்பி சென்று வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் சந்தேகநபர்களில் இருவர் சுழிபுரம் பகுதியில் மறைந்திருந்த வேளையில் அவர்களை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (14) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் 27 மற்றும் 32 வயதுடைய சகோதரர்கள் ஆவார்கள். மிகுதி மூவரையும் கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களைக் கோடரியினால் தாக்கி உள்ளனர். 4.12.13 அன்று நள்ளிரவு கற்பக பிள்ளையார் கோவிலடி-உடுவில் கிழக்கைச் சேர்ந்த செல்லத்துரை சண்முகநாதன் என்பவரது வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலில் 50 வயதுடைய செல்லத்துரை சண்முகநாதன், அவரது மனைவியான 45 வயதுடைய நாகேஸ்வரி இவர்களது மகனான 20 வயதுடைய யதுசன் ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் யதுசன் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார். யாழ் இந்துக் கல்லூரி மாணவனான யதுசன் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மருத்துவ பீடத்திற்கு செல்லக் கூடிய பெறுபேறுகளை எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.