மூளை காய்ச்சலால் உயிருக்கு போராடும் சிறுமியின் கடைசி ஆசையை நடிகர் பவன்கல்யாண் நிறைவேற்றியுள்ளார்.
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் பால் வாஞ்சா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் நாகையா– நாகமணி. இவர்களது 2–வது மகள் ஸ்ரீஜா (12).
ஸ்ரீஜா கடந்த 15ம் திகதி மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டார், இதையடுத்து கம்மம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால், பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
ஸ்ரீஜா, நடிகர் பவன்கல்யாணின் தீவிர ரசிகை, அவர் நடித்த கப்பர் சிங் படத்தை பார்த்து பவன்கல்யாணை கப்பர் சிங் என்றே அழைத்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவதற்கு முன்பு பவன்கல்யாணை பார்க்க வேண்டும் என்று தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
ஆனால் மரண படுக்கையில் இருக்கும் ஸ்ரீஜாவின் ஆசை நிறைவேறாமல் போய் விட்டதே என்று அவரது தந்தை கதறி அழுதார்.
இதனை தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அறிந்த நடிகர் பவன்கல்யாண், ஸ்ரீஜா சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்துள்ளார். கோமா நிலையில் இருந்த ஸ்ரீஜா பவன் கல்யாண் வந்ததை உணர முடியவில்லை.
ஸ்ரீஜாவின் அருகில் அமர்ந்த பவன்கல்யாண் அவளது கையை பிடித்து வருடிய படி காது அருகில் குனிந்து ஸ்ரீஜா நான் பவன்கல்யாண் வந்து இருக்கிறேன் என்று மெல்லிய குரலில் கூறியுள்ளார்.
உடன் இருந்த ஸ்ரீஜாவின் தந்தை நாகையாவும், ஸ்ரீஜா உனது கப்பர்சிங் வந்து உள்ளார். கண் திறந்து பாரேன் என்று கதறியபடி கூறியுள்ளார்.
ஆனாலும் ஸ்ரீஜாவிடம் எந்த உணர்ச்சியும் ஏற்படவில்லை. பெற்றோர்கள் கதறி அழுததை கண்டு பவன் கல்யாண் கண் கலங்கினார்.
ஸ்ரீஜா குணமடைய வேண்டுதல் நடத்தி கொண்டு வந்த விநாயகர் சிலையை பரிசளித்தார். மேலும் அவளது சிகிச்சைக்கு உதவியாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையை அவளது தந்தையிடம் வழங்கியுள்ளார்.
நீண்ட நேரம் அங்கிருந்த பவன்கல்யாண் தான் வந்திருப்பதை ஸ்ரீஜா உணரவேண்டும் என்று பலவாறு முயற்சி செய்தார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
மரணபடுக்கையில் சிறுமி: ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகர் (வீடியோ இணைப்பு)
